இது குடும்பங்களின் பிரச்சனை ...

சாமானிய டைரி 2:

நேற்று Dhamayanthi பகிர்ந்திருந்த ஒரு சம்பவம் மனதை பாதித்தது ...

ஈக்காட்டுத்தாங்கல், ஆம்வே பக்கம் ஒரு பெண் ஸ்கூட்டியில் அவளோடு ஒரு ஆண் பேசியபடி இருந்தான். சடாரென, அந்தப் பெண்ணை அவன் வாகனத்திலிருந்து இழுத்து கீழே எறிந்தான். பக்கத்தில் மெட்ரோ வேலைக்காக தோண்டப்பட்ட கல்/ மண் குவிந்த இடத்தில் ஒரு பந்து மாதிரி தெறித்து விழுந்தாள்.

உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் என்னவென்று அவனை நெருங்க ...
"Family பிரச்னை..நீங்க போங்க ..."
அந்தப் பெண் நெஞ்சைப் பிடித்தபடி வண்டியில் அமர்ந்து
“என் Husband தான்... ஷாப்பிங் போலாம்னு கூப்பிட்டேன். அவர் ப்ரெண்டோடப் போயிட்டு இப்ப தான் வந்தார். ஏன்னு கேட்டேன்... அதனால சண்டை" என்றபடி அவர் கண்களில் நீர் ததும்பியது.

இதைப் பார்த்த அவன் மமதையுடன் “என்ன சீன் போடுற என்று முறைத்தான்." தமயந்தி அவனை திட்ட தொடங்கியதும், அந்தப் பெண் “வுட்டுருங்க... அவர் இன்னும் அடிப்பார்”என்று தணிந்த குரலில் சொன்னது.
----

இந்த ஒரு சம்பவத்தில் பின்னணியை ஆராய்ந்து தீர்ப்புச் சொல்வது நம் வேலையல்ல. ஆனால், சக மனிதர்களுக்குள்ளான பிணக்குகளை தீர்க்கும் ஜனநாயக வழிமுறைகளில் எதுவும், தன் மனைவிக்கு பொருந்தாது என்ற மனநிலையை அந்த ஆணிடம் காண முடிந்தது.

ஆளுமை நிறைந்தவர் என்பதை, உடல் வலிமையும், ஆதிக்கமும் முடிவு செய்வதில்லை. மாறாக நமக்காக கவலைகொள்ள எத்தனை மனிதர்களைப் பெற்றிருக்கிறோம் என்பதுதான் நம் ஆளுமையை உருவாக்குகிறது.

சிறியோரை இகழ்தல் இலம் என்ற புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது. சக மனிதனின் சுய உணர்வுகளை எத்தனை காயப்படுத்துகிறோமோ, அத்தனை கீழான நிலைக்கு நாம் நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். உயர்வு நம்மிலிருந்து தொடங்கட்டும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels