வாழ நினைப்பது ராஜதுரோகமெனில், நாங்கள் ராஜதுரோகிகள்

நிலமோசடிகளை இனி சட்டப்படி செய்வோம் ! என்கிறது அரசு ...

சாலை, ரயில் பாதை, பாலம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்திட சட்டத்தில் வழியுள்ளது. ஆனால், முரட்டுத்தனமான இந்தச் சட்டம் - பொதுமக்களை நிர்க்கதியாக்கியது.

காலம் காலமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலத்தை கையகப்படுத்திவிட்டு - சிறு தொகையை இழப்பீடாகக் கொடுப்பதோடு ‘போ, எல்லாம் முடிந்தது’ என விரட்டிவிடும் அதிகார வர்க்க நடைமுறைதான் இதற்கு காரணம்.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை - மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் எழுப்பினார்கள். நிலத்தை இழப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்திரவாதம், நியாயமான விலை உள்ளிட்டவை அடங்கிய மசோதா - எதிர்பார்க்கப்பட்டது.

இந்த அடிப்படையில் - 2011ம் ஆண்டு நிலம் கையகப்படுத் தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் மசோதா உருவாக்கப்பட் டது. தற்போது அதில் சில திருத்தங்களைச் செய்துள்ள காங்கிரஸ், நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவின் ஒப்புதலையும் பெற்றது.

அதென்ன திருத்தம்?

வளர்ச்சித் திட்டங்களுக்கான வரிசையில் - பெரிய தனியார், அன்னிய கம்பெனிகளும் உண்டாம். நெடுஞ்சாலைக்கு நிலமெடுப்பது போல, கம்பெனிகளுக்கு நிலமெடுத்து அரசே கொடுக்கும்.
விவசாயத்தை நம்பியிருந்த விவசாயத் தொழிலாளர்களின் வேலை இழப்பை கணக்கில் கொள்ளாது.
ஆதிவாசிகளை மலைகளில் இருந்து அகற்றிடவும் வகை செய்து கொடுக்கும்.

சிறுகச் சிறுக குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த வீடு, பல்லாண்டுகளாய் உயிர் கொடுத்து பண்படுத்திய நிலத்தை விட்டு மக்களை விரட்டியடிக்க கவலையற்றதான அரசு - அநீதியை சட்டமாக்க நினைக்கிறது. ஏற்கனவே, தனியாருக்கு மிகக் குறைந்த விலையில் நிலத்தை தாரைவார்ப்பதில் முன்நிற்கும் மோடியின் பாஜக - காங்கிரசோடு கைகோர்த்து நிற்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.


இந்த மசோதாவை இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான செய்தி.

மசோதா - சட்டமாக அனுமதியோம்!

#மக்கள் வாழ நினைப்பது ராஜதுரோகமெனில், நாங்கள் ராஜதுரோகிகள்

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels