புத்த சமண மதங்களின் தோற்றமும் - எதிர்ப்பும் ...

எஸ்.ஏ.பெருமாள்
 தமிழகத்தில் ஆரம்பக் காலத்தில் பண்டமாற்றில் ஈடுபட்டு வந்தவர்கள் நாளடைவில் வணிக வர்க்கமாய் உயர்ந்தனர். வளர்ச்சிப் போக்கில் தமிழகத்தில் வணிகர்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுக ளோடும் வணிகம் செய்தனர்.

வணிகம் பெருகப் பெருக துறைமுகங்கள், நகரங்கள் உருவாகி வளர்ந்தன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்தனர்.

“கலம் தந்த பொற்பரிசம்” என்றும்
“யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன் னொடு வந்து கறியொடு பெயரும்” 

என்று புறப்பாடல்கள் கூறுகின்றன. வணிகர்கள் செல்வத்தில் திளைத்ததால் “மன்னர் பின்னோர்” ஆகி அரசருக்கு நிகராயினர். போடி நாயக்கனூரிலும், சென்னை மாம்பலத்திலும் கிடைத்துள்ள பொன் நாணயங்கள் மீன் இலச் சினையோடு உள்ளன. இவற்றைப் பாண்டிய நாட்டு வணிகர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வணிகர் தம் பெருமை களை சிலப்பதிகாரமும் மதுரைக்காஞ்சியும் செப்புகின்றன.

தங்கள் வளர்ச்சிக்குத் துணை நின்ற சமணத்துறவிகளுக்கு மடங்கள், பள்ளிகள், குகைகள், குடவரைகள் உருவாக்க வணிகர் கள் உதவினர். செல்வ வளம் பெற்று, சமூகச் செல்வாக்குப் பெற்ற வணிகர்களைப் பின்பற் றிப் பொதுமக்களும் சமணத்தைத் தழுவினர். இதனால் அரசர்களும் சமணத்தைத் தழுவி டும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வணிகர்கள் உற் பத்தியில் நேரடியாய் ஈடுபடாதவர்களாவர். வேளாளரே நிலவுடமையாளராய் உற்பத்தி யைக் கையில் வைத்திருந்தனர். இவ்வேளாண் பெருமக்களின் வீடுகளில் உணவு தானியங் கள் மலைபோல் சேமித்து வைக்கப்பட்டிருந் தன. நிலக்கிழார்களான வேளாளரில் அரசர் களுக்கு ஆதரவாகப் படைதிரட்டி ஆள் அனுப்பி உதவினர். “படை வேண்டுழி படை யுதவியும் - வினை வேண்டுழி வினையுதவி யும் செய்ததாய்” புறப்பாடல் கூறுகிறது.

கடவுளை மறுத்த சமயங்களான புத்த, சமண சமயங்களை வளர்த்ததில் வணிகர் கள் பங்கு மகத்தானது. நாட்டுப்புறத்தெய்வங் களுக்கு ஏராளமான சிலைகள் வைக்கப் பட்டு, ஒவ்வொரு சிலையின் பேராலும் பூசா ரிகள் ஆடு, மாடுகளைப் பொதுமக்களிடம் பலியாய் கேட்டனர். இந்தக் கொடும் சுரண் டலிலிருந்து மீள மக்கள் புத்த, சமண சமயங் களில் கூட்டம் கூட்டமாய் சேர்ந்தனர். வணி கர்களின் தயவில் புத்த மடாலயங்களும் நிறு வப்பட்டன. நாகையில் பெரும் புத்த விகார் நிறுவப்பட்டிருந்தது.

சமூகத்தில் வணிகர்கள் ஒரு வர்க்கமாய் உருவெடுத்தனர். வணிக வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையே முரண்பாடுகள் வளர்ந்தன. இந்த இரு பெரும் பிரிவுகளும் தமது நலன் கருதி ஒருமித்தும் சென்றன; மோதவும் செய்தன. உற்பத்தியில் ஈடுபட்ட வேளாளரும், அந்த உற்பத்திப் பொருட்களைப் பரிமாற்றம் செய்த வணிகர்களும் சமூகத்தில் அருகருகேதான் வாழ்கின்றனர். இரு பிரிவினருக்குமே அரசனிடத்தில் செல்வாக்கு உண்டு. இருவரும் தமது முரண்பாடு களை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர். இந்த முரண்களையும் மோதல்களையும் சிலப்பதிகாரம் பிரதிபலிக்கிறது.

பொதுவாக ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களையே மதங்கள் கூறி வந்துள்ளன. மனிதகுல வரலாற்றில் முரண்பட்ட இரு வர்க்கங்கள் சேர்ந்தே வாழ்கின்றன. ஒன்றோ டொன்று போராடுகின்றன. முரண்பாடு முற்றும் போது அது பகை வடிவமாய் வெளிப்படு கிறது. ஒரு காலத்தில் பாங்கறிந்து பட்டிமண் டபம் ஏறித் தங்கள் கருத்து முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டனர். முரண்பாடு பகையான தும் “அனல் வாதங்களும் புனல் வாதங்களும் எழுந்தன. அதில் தீர்க்க முடியாது போய் “கழு வேற்றங்களில்” முடிந்தது.

இதுவரை உற்பத்திப் பொருட்கள் மீது மட் டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வணிக வர்க் கம், உற்பத்திச் சாதனமான நிலங்களையே பறித்து மதபீடங்களுக்கு வழங்கியது. வேளா ளர்களின் நிலங்களை மதப் போர்வையில் பறிக்கும் போது பகை முரண்பாடு முற்றுகிறது.

தங்கள் நிலங்களை மீண்டும் மீட்டு, உற்பத்தியில் தாங்கள் இழந்த கட்டுப்பாட்டை நிலை நிறுத்தும் முயற்சியில் வேளாளர்கள் இறங்கினர். சமண மதப் பிடிக்குள் இருந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தனர். எனவே கருத்துலகிலும் தங்கள் போராட்டத்தை நடத்த களமிறங்கினர்.

பொருளாதார அடித்தளத்தில் மேலிருந்த மேற்கட்டுமான இலக்கியம், மொழி, இசை, தத்துவம், மதம் போன்ற பல அம்சங்களில் வணிகர்களுக்கு எதிரான போராட்டமே சம ணத்திற்கு எதிரான போராட்டங்களாய் மாறின. வணிக வர்க்கத்துக்கு எதிரான நிலப்பிரபுத்து வத்தின் பொருளாதாரக் குரோதம் சமண சம யத்திற்கு எதிரான போராட்டமாய் உருவெடுத் தது. அடித்தளம் மேற்கட்டுமானத்தைத் தகர்த்துப் புத்துருவாக்கம் செய்தது எனலாம்.

சமணம், கடவுளை மறுத்தது. பந்தங்களி லிருந்து விடுபட்டு மோட்சமடைந்த உயிரே கடவுளாகும். உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. உயிர்கள் தமது சொந்த முயற்சி யாலே மோட்சம் எய்த முடியும். இதுவே உயி ரின் இயல்பாகும் என்பதே கடவுள்- உயிர் குறித்த சமணக் கோட்பாடாகும். இதை சைவம் கடுமையாய் எதிர்க்கிறது. இறைவன் உயிர்களுக்காகவே உலகைப் படைத்தான். உயிர்களின் கர்மத்தைப் பக்குவப்படுத்தி அறியாமை, ஆணவமயத்தைப் போக்குகி றான். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும் உயிர்களின் பொருட்டு இறை வனால் நிகழ்த்தப்படுகின்றன என்றது சைவம்.

சிலர் உயர் குடியாய் வணிகராய் வாழ்வதற் கும், பெரும்பாலோர் கூரைக்குடியாய் ஏழ்மை யில் வாழ்வதற்கும் அவர்தம் வினைப்பயனே காரணம் என்று சமணம் கூறியது. ஏழ்மை யில் வாழ்தல் வினைப்பயன் என்று கூறி அவர்களைச் செயலற்றவர்களாக்கியது. சிலப் பதிகாரம் கூட ஆள்வினையை விடச் சூழ்வி னையே வலிமையானது என்று கூறுகிறது. சமணர் என்று கருதப்படும் திருவள்ளுவர் கூட வினைக் கோட்பாட்டை வலியுறுத்து கிறார். இதற்கு எதிர்க் கோட்பாட்டை நிறுத்த வேண்டிய அவசியம் சைவத்துக்கு ஏற்பட் டது. மக்களைச் செயலிழக்கச் செய்யும் வினைக் கோட்பாட்டினை அடிப்படையில் தகர்ப்பது தங்களுடைய வர்க்க நலனுக்கும் எதிரானது என்று சைவர்கள் கருதினர். இத னால் வினையை எதிர்க்காது, அவர்கள் வினையின் முதன்மைத்தன்மையை மட்டும் எதிர்க்கின்றனர். வினைக்கும் மேலாய் இறை வனை நிறுத்தினர். வினையின் வெம்மைத் தன்மையை நீக்கி இறைவனின் கருணைத் தன்மையை வைத்தனர். இறைவனை வணங்கினால் வினைகள் அகலும் என்று பிரச்சாரம் செய்தனர்.

பக்தி இயக்கம் கண்ட நாயன்மார் தமிழ் மொழிக்கு ஏற்றம் கண்டனர். தத்துவவாதிகள் எல்லாக்காலங்களிலும் மொழியை ஒரு சிறந்த கருவியாய் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல் நாயன்மாரும் தமிழின் புகழைப் பாடியே தமது தத்துவங்களைக் கூறினர். மொழி செவிவழியோடி, கண் வழிகண்டு மனிதரின் மனத்தை நிறைக்கிறது. தமிழைப் புகழ்ந்து அவர்கள் அதற்குத் தெய்வத்தன்மை கொடுத்தனர். தமிழையே தாய்த் தெய்வமாக் கினர். “மறையிலங்கும் தமிழ்” என்றும், “தவம் மல்கு தமிழ்” என்றும் பாடிப் புகழ்ந்தனர். இதன் மூலம் சமணரின் வடமொழி, பிராகிருத மொழிகளை எதிர்த்து நின்றனர். தமிழை ஏற்றிப் போற்றி மக்களை உணர்ச்சி வெள்ளத் தில் ஆழ்த்தினர்.

தமிழையும் புலமையையும் கடவுளாக்கி யது போல் கடவுளையே புலவராகவும் தமிழ் மேதையாகவும் ஆக்கினர். இதை சிவனுக் கும் நக்கீரனுக்கும் நடந்த சொற்போரினால் அறியலாம். சமண சமயத்தின் தர்க்கவியல் அணுகுமுறையான எரிந்த கட்சி, எரியாத கட்சிப் பட்டிமண்டபங்களைச் சைவரும் தொடரவேண்டிய அவசியம் இருந்தது. இது ஏற்கனவே இருந்த தமிழர் சிந்தனை மரபைப் பின்பற்றியதாகும்.

போராட்டங்கள் நடைபெறும் போது அவற் றின் ஏற்ற இறக்க திசைவழிக்கேற்ப கருத்துக் களும் மாறுதல் அடையும். கி.பி. ஏழாம் நூற் றாண்டில் உருவான சங்கம் அதற்குப் பின்பு வந்த சமண சமய எதிர்ப்பாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டது. நூற்றாண்டுகளில் கால மாறுதலுக்கேற்ற கருத்துக்களும் வளர்க்கப் பட்டன. கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள், திருமங்கையாழ்வார் போன்ற வைணவக்கவிஞர்களாலும் , கி.பி 9ம் நூற் றாண்டில் மாணிக்க வாசகராலும் வளர்க்கப் பட்டது.

பொன்னையும் பொருளையும் குவித்து பண்ட மாற்றில் மட்டுமே ஈடுபட்டு, உற்பத்தி யையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வணிக வர்க்கம் வீழ்ச்சியடைந்தது. வேளா ளர் வர்க்கம் வெற்றி பெற்று உற்பத்தியையும் பங்கீட்டையும் தானே செய்தது. பொருளியல் ஆதிக்கம் வேளாளர் கைக்கு வந்தது. சமயப் போர்வையில் வணிகர்கள் கைப்பற்றிய நிலங் களை வேளாளர்கள் பரந்த மக்கள் சக்தியைத் திரட்டி மோதி வெற்றி பெற்று மீட்டுக்கொண்ட னர். ஒரு காலத்தில் கோலோச்சிய சமண, பவுத்த சமயங்கள் அடியோடு வேரறுக்கப்பட்டு சைவமும், வைணவமும் தமிழகத்தில் தழைத்தன.

பவுத்த ஆலயங்கள் வைணவக் கோவில் களாய் மாற்றப்பட்டன. புத்தரின் அனந்த சயனச் சிலைகள், பள்ளிகொண்ட பெருமாளாக்கப்பட்டது. அதே போல் சமணக் கோவில்களும் பள்ளிகளும் சிவ, முருகக் கோவில்களாய் மாற்றப்பட்டன. பவுத்த, சமணத் திருவிழாக்கள் வைதீக மதத்தால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. அதில் ஒன்று தான் தீபாவளியாகும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels