அஞ்சலியின் அந்தரங்கம் - சூடான விற்பனைப் பொருள் ... உங்கள் கண்ணீர் அப்படியல்லவே!

சித்தியால் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட ஒரு நட்சத்திரம் - அதற்கு துணை போனதாக குற்றம் சாட்டப்பட்ட இயக்குனர். "நடிகையைப் பற்றிய பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும்" என்ற மிரட்டல். படிக்கப் படிக்க சுவாரசியமாய் இருக்கலாம்.

தன்னையே ஒரு சரக்காக்கி - அதன் புகழ் மங்காமல் பார்த்துக் கொள்ளும் வரை ஒரு ஆணுக்கும், புகழொடு கன்னியென்ற முத்திரைய மறையாமல் காத்துக் கொள்ளும் வரை ஒரு பெண்ணுக்கும் - நட்சத்திரமாய் வலம் வரும் தகுதி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சரக்குகளுக்கு - மனித உணர்வுகள் கிடையாது. சரக்குகளை மனிதராய்ப் பார்ப்பதும் கிடையாது. ஒன்று அவர்கள் தெய்வமாகிறார்கள், அல்லது அவர்கள் தெருவோரப் போஸ்டர்களில் மேயப்படுகிறார்கள்.
-

'நல்ல சட்டையை திருவிழாவுக்குப் போட்டுக்கலாம். இல்ல பட்டணத்துக்கு போகயில போட்டுக்கலாம்' என்ற காரியவாத சிந்தனையோடு கோவணமுடுத்தித் திரியும் - சதைப் பிண்டங்களுக்கு அவ்வளவு கவனிப்பில்லை.

விலை உயர்ந்த மருத்துவத்தின் வாசலில் தன் பிள்ளைத் தாச்சி பெண்டாட்டியோடு - வறுமையின் அம்மணத்தை மறைக்க முடியாமல் கண்ணீர் விட்டழுகும் ஒரு தகப்பனின் அந்தரங்கத்துக்கு அத்தனை மதிப்பில்லை.

50 ஆயிரத்தில் கனவு கண்டு - 10 ஆயிரம் கொடுத்தாலும், 4 ஆயிரம்தான் கிடைக்குமென்றாலும் பரவாயில்லை என்றபடி சமரசம் செய்துகொள்ளப்பட்ட ஓராயிரம் கனவுகள். அவர்கள் சந்தித்த ஏமாற்றங்களுக்கு யாரும் காதுகொடுப்பதில்லை.
-

நடப்பது இதுதான். இதுவொரு வியாபார உலகம்.

பிறன் மனை நோக்காமை நல்லொழுக்கம் என்று வள்ளுவன் சொல்லித் தந்திருக்கலாம். ஆனால், எந்த வியாபாரமும் இதை ஒப்புக் கொள்ளாது. - வாங்கும் சக்தியிருக்கிறவனின், விருப்பங்களுக்கு தீனி போடுவதன் மூலம் வியாபாரம் செய்வதுதான் நோக்கமேயன்றி, வாங்கும் தேவையிருந்தும் வஞ்சிக்கப்படுபவனின் குரலை ஒலிக்காதிருப்பதில் ஒரு குற்றமும் இல்லை.

இந்தியா முழுவதும் கார்பரேட்டுகளோடு கூட்டமைத்து மக்களின் வாழ்வாதாரம் களவாடப்படுவதற்கு எதிராகவும் - லட்ச லட்சமாய் தற்கொலை செய்து மடியும் விவசாயிகளோடு கைகோர்த்து - அநீதிகளை வீழ்த்துவோமென்று சபதமெடுத்து - பல லட்சம் தொழிலாளர்கள் ஒன்று கூடிய - மாநாட்டின் செய்தி ஒரு மூலையில் கூட பிரசுரமாகவில்லை.



மக்கள் வாழ்க்கைப் பாட்டை, அதற்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை பின் தள்ளி. அஞ்சலியின் கண்ணீர்க் குரலோடு அவதாரமெடுத்திருக்கும் இன்றைய பத்திரிக்கைகளை என்னவென்று சொல்ல. அது அஞ்சலின் குற்றமல்லவே !

1 comment:

  1. சரியான விழிப்புணர்வு பதிவு எழுதிய உங்களுக்கு மனமார்ந்த பர்ராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ஊடகங்கள் எல்லாம் பணத்திற்காக எதுவும் செய்யும், சதைகளையும் பிணங்களையும் தின்னும் கழுகுகள் மாறி மாறி ஆட்சியில், மது மயக்கம் ஆண்களுக்கு அனைவரையும் ஆட்டுவிக்கும் தொலைகாட்சி தொடர்கள், பிஞ்சு கூட புகை போடாமல் பழுக்கின்ற நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

    உண்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் சரித்திரத்தில்.
    நன்மைக்களே! உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பணம் தடை அல்ல அவர்களின் அறியாமையே! அதை நீக்குவதும் பரப்புரை செய்வதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை. முடிந்த மட்டும் அனைவரும் அறிய பகிர்வோம் நாளை நாடு நம்மை வணங்கும். வளரும் மனித வளம் மேம்பட நாள்தோறும் ஒரு கிளிக்கில் கடமையாற்ற வாரீர் நட்புடன் பாலசுப்ரமணியன்

    http://vitrustu.blogspot.in/2013/04/blog-post_13.html

    ReplyDelete

Labels