கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் தகுமோ 2 : சில விவாதங்கள்

பெரும்பாலும் விளைவுகளின் மீது விவாதம் நடத்தும் நாம், அடிப்படைக் காரணங்களை நோக்கிச் செல்வது குறைவு. நேற்று வாரிசு அரசியல் தொடர்பாக ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது.

அய்யா பழ.கருப்பய்யா - இந்தியா முழுவதும் எல்லாக் கட்சிகளும் இப்படி மாறிவிட்டன. இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது என்று பொதுப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார். தொடர்ந்து பேசிய பத்திரிக்கை ஆசிரியர் Vijayasankar Ramachandran அரசியலில் தகுதியற்ற வாரிசுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் - இப்படியான குற்றச்சாட்டு இடதுசாரிகள் மீது இல்லை என்பதைச் சொல்லி - அடுத்ததாக எதையோ சொல்ல எத்தனிக்க ...

விவாதத்தை ஒருங்கிணைத்த Gunaa Gunasekaran (அவர்களிடம் இப்படிப்பட்ட நல்ல பண்புகள் இருந்தால் என்ன?) 'அவர்கள் வெற்றிகரமாக இல்லையே' என்று கேள்வியெழுப்பினார். அவ்வளவுதான் விவாதம் முழுக்க திசை மாறிவிட்டது.

இதில் எனது கருத்து "அரசியல் கட்சிகள் கொள்கை சாராம்சத்தை இழந்து, சிலரின் கைப்பாவைகளாக மாறிவிடும்போது, தகுதியற்ற வாரிசுகள் முன்னுக்கு வருகிறார்கள்." என்பதாகும். பொதுவாக தேர்தல் 'வெற்றி'யை மட்டுமே மையப்படுத்தி அரசியலை மதிப்பிடுவதுதான் இந்த சருக்கலுக்கு முதல் அடிப்படையாக அமைகிறது.

நாம் கொண்ட கொள்கையில் சறுக்காமல் - ஒரே ஒரு அடி முன்னேற முடிந்தாலும் அதுதான் வெற்றி. கொள்கையை இழந்ததால் நமக்கு அகிலமே கிடைத்தாலும், அதுதான் மிகப்பெரும் தோல்வி.

தமிழகத்தில் பண்பாட்டுத் தளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அய்யா பெரியாரும், ஜீவானந்தமும், சீனிவாசராவும் எத்தனை தேர்தல்களின் வெற்றிபெற்றார்கள்? ... ஆனால், இன்றைக்கு வெற்றியை மட்டுமே மையமாகக் கொண்டு சிந்திக்கும் அரசியல் இயக்கங்கள் - கொள்கைகளின் எத்தனை நீர்த்துப் போயிருக்கின்றன.

சிலருக்கு இடதுசாரிகளின் அரசியலில் மாறுபாடு இருக்கலாம், சிற்சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்து - பொது நோக்கத்தை முன்நிறுத்திய மெய்யான கூட்டணிகள், இடதுசாரிகள் வலுப்பெரும்போதுதான் நடக்கிறது என்பதை இணைத்துப் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்தியவர்களும், அதன் மூலம் கூட்டாட்சிக்கு புதிய பொருள் கொடுத்தவர்களும் இடதுசாரிகள். சொந்தக் கட்சிக்குள் மாநாடு, நிர்வாகிகள் தேர்வு, கொள்கை அறிக்கை மீதான விவாதம் போன்ற சமயங்களில் அதிகபட்ச ஜனநாயகமும், பிற சமயங்களில் நேர்த்தியான கட்டுப்பாடும் கொண்டு செயல்படுகிறார்கள்.

அரசியலில் இருந்து கொள்கைகள் தனிமைப்படுவது மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்தை உணர்ந்த எதிர்வினைகள் தேவைப்படுகின்றன.

கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் தகுமோ 2

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels