இந்தியாவிலிருந்தபடி ஈழத்தைப் பெற்றெடுத்தல் !

ஈழத் தமிழர் விவகாரத்தில் - தனி ஈழமே தீர்வென்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதை மறுத்தாலோ ஏகத்துக்கு வசவுகளும், வம்படிகளும் வழங்கப்படுகின்றன. ஜனநாயக அணுகுமுறை இல்லாத நிலைகளும், பகுத்தாராய மறுப்பதும் - முழுமையான பரிசீலனைக்கு உட்படாத உணர்ச்சிவயப்பட்ட முடிவுகளும் கண் முன்னே கிடைக்கின்றன.

உடல் சிதைந்து கிடக்கின்ற பச்சைப் பிள்ளையின் உடலை முன் நிறுத்தி பதிவுகள் செய்யப்படுகின்றன. இரத்தத்தைப் பார்த்ததும், உணர்ச்சி கொந்தளிக்கும் தமிழ்ச் சினிமா நாயகர்களைப் போல் - உணர்ச்சியூட்டிக் கொள்ளமுடியும் - அறிவூட்டிக் கொள்ள முடியுமா? என்பதுதான் முதற் கேள்வி.

இலங்கையில் இன்றைக்கும் செயல்பட்டுவரும் தமிழ் அரசியல் சக்திகளின் விவாதங்களுக்கு காதுகொடுத்தால் அல்லவா - அதன் சிக்கலுக்குத் தீர்வு காணவும் முடியும்???

சமீபத்தின் தேனீ இணையத் தளத்தில் சிவா சுப்பிரமணியம் எழுதியிருக்கும் கட்டுரையை வாசித்தால் சில உண்மைகள் விளங்குகின்றன. (http://thenee.com/html/100313-1.html)

///சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தருமா என்ற சிந்தனையில் பின்வரும் நான்கு கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் சர்வதேச சமூகம் அக்கறை கொண்டுள்ளதா? அக்கறை உண்டென்றால் அதன் செயற்பாட்டு எல்லை எது? சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு இலங்கை அரசாங்கம் பணிந்து போகுமா? சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற சூழ்நிலை இலங்கையில் உண்டா?///

உலகில் எத்தனையோ ஆயுதப் போராட்டங்கள் வென்றிருக்கின்றன. ஆனால், ஈழத்துக்கான போராட்டம் வெல்லவில்லை என்பது மட்டுமல்ல - மிகப்பெரும் மனித அழிப்பை - எந்தச் சலனமும் இல்லாத வகையில் செய்து முடிக்க இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு உதவியிருக்கிறது.

சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாக முன் நிற்கும் ஆளும் வர்கங்கள் - மக்களின் பிரதிநிதிகள் அல்லர். அவர்களும் ஆளும் வர்கங்களின் பிரதிநிதிகள் என்பதைக் கொண்டு பார்க்கையில் - அவரவர் லாப நட்டங்களைக் கணக்கிட்டே காய் நகர்த்துவார்கள் என்பது வெளிப்படை.


இலங்கையின் அரசாங்கமும் - முழுமையான மக்கள் விருப்பங்களை பிரநிதித்துவப் படுத்தும் அரசு அல்ல என்ற உண்மையைக் கொண்டு பார்க்கையில் - சம உரிமைக்கான இலங்கையின் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவை அதிகரிப்பதன்றி வேறெந்த உணர்ச்சி முழக்கமும் மக்களுக்குப் பயன்படும் என்று தோன்றவில்லை.  - அக் கட்டுரையாளர் சொல்லியிருக்கும் கருத்துக்களையும் ஆராயும்போது - இந்தியத் தமிழர்கள் நமது முயற்சிகளை பயனற்ற வழியில் செலுத்தி வீணாக்கிவிடக் கூடாது என்ற ஆதங்கமே மேலோங்குகிறது.

5 comments:

  1. தமிழர் ஒற்றுமையும், விவேகமும், ராஜ தந்திர நகர்வும் மிக முக்கியம்

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே,
    /இலங்கையில் இன்றைக்கும் செயல்பட்டுவரும் தமிழ் அரசியல் சக்திகளின் விவாதங்களுக்கு காதுகொடுத்தால் அல்லவா - அதன் சிக்கலுக்குத் தீர்வு காணவும் முடியும்???//

    மிக சரியான பார்வை.

    இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை,பாரபட்சம் அற்று அறிவதே தீர்வு நோக்கிய முதல் படி!!

    பிறகு தொடர்புள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் பேச்சு வார்த்தை என ஆக்க பூர்வமாக முன் செல்வது நன்று!!!

    நன்றி!!!

    ReplyDelete
  3. Dear bro kindly remove the word verfication.
    Thank you

    ReplyDelete
  4. குரு ,
    ஒரு அர்பணிப்பான அமைதிப்படை அறிவுபடை திட்டமிட்டு ஈழ மக்களோடு இனைந்து போராடவேண்டும்.முதலில் யாருக்கு ஈழம் வேண்டும், அவசியம் என்று கண்டறியப்பட்டு அவர்கள் மூலமாக போராட்ட நகர்வு இருக்கவேண்டும்,ஈழம் கண்டிப்பாக அமையும்.ஆனால்,அதற்கு நாம் ஈழ மக்களுக்கு உதவ வேண்டும் எப்படி எனில் சிங்கள மக்களை விட அரசியல் தெளிவு பெற வேண்டும் .ஒன்றை விட்டுகொடுத்து தான் ஒன்றை பெற முடியும் .இன்னும் நிறைய...... பார்க்கலாம். ஒன்று, உணர்வுகள் மட்டும் மூலமாக வைத்து ஈழம் அடைய முடியாது.

    ReplyDelete
  5. தீர்வு சொல்லும்போது யாவரும் தமமது கருத்தைத்தான் கூற முற்படுகிறார்கள்.இலங்கையில் தமிழர் மைனாரிடீஸ் என்ற பார்வையில்தான் இந்தியா, உலக நாடுகள் பார்க்கின்றன். ஆனால் மூன்று பெரும் ஆட்சிப்பகுதிகள் ஆஙிலேயரால் ஒன்றாக்க்கப்பட்டு திரும்பும்போது மெஜாரிட்டி மக்கள் பிரத்நிதிகளிடம் கொடுத்துச் சென்றார்கள். நாடு பிரிவினை என்பது( பெருஞ்சித்திரனார் கூறியதைப்போல ) துண்டு செய்து தூக்கிப்போவதல்ல அந்தப்பகுதியை யார் ஆள்வது எந்த சட்டம் விதி கொண்டு ஆள்வது என்பதுதான். எனவே கொலை வெறி கொண்டுள்ள அவர்களுடன் இணைந்து வாழச் சொல்ல மனமில்லை.தமிழீழமே தீர்வு.

    ReplyDelete

Labels